நாகர்கோவிலில் இருந்த காலங்களில், அதாவது எனது 21வது வயது வரை, ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களையோ அவரைப் பற்றியோ எதுவும் தெரியாமலேயே இருந்திருக்கிறேன் என்று இன்று நினைத்துப் பார்க்கும்போது கூச்சமாக இருக்கிறது.
அப்போதெல்லாம் என் வாசிப்பு என்பது வெகுஜன பத்திரிக்கைகளில், முக்கியமாக விகடனில், எழுதி வந்த பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களைத்தாண்டி, நானாக லைப்ரரியில் இருந்த புத்தகங்களுக்குள் தேடிப் படித்த புத்தகங்கள் மட்டுமே. ஒரு வழிகாட்டியோ, துணையோ இல்லாமல் யார் யாரையோ வாசித்து வந்திருந்தேன். அடுத்த பத்தாண்டுகள் வேலை, வேலை சம்பந்தமாக வாசிப்பு, பெரும்பாலும் அபுனைவுகள் என்று ஓடிவிட்டது. 2010களில் அலுவலக வேலைகளை குறைந்த நேரத்தில் என்னால் செய்து முடித்து விட முடியும் என்று ஆன பின்பு, கைவசம் நிறைய நேரமும், இணைய வசதியும் இருக்க the old itch started. இணையத்தில் தமிழைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். Blogging தமிழில் பரவலாகியிருந்த அந்த காலகட்டத்தில் எங்கோ ஓருவர் ஜெமோவை வசை பாடி எழுதி வைத்து இருக்க, எதற்காக அவர் இப்படி வசைபாடப்பட்டிருக்கிறார் என்ற ஆர்வத்தில் ஜெயமோகன் தளத்திற்குள் நுழைந்தேன். Fell into the rabbit hole என்பதைப் போல அன்று ஆரம்பித்த பயணம்.
இப்படி ஒரு ஆளுமை நம் வீட்டிலிருந்து 15 நிமிட நேர தூரத்தில் இருந்திருக்கிறார்,இருக்கிறார் என்பது தெரிய வந்த போது நான் 15000 கிலோமீட்டர்கள் தாண்டி வந்திருந்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் தளத்தை வாசிப்பது ஒரு அன்றாடப் பழக்கமாகவே ஆகிப் போனது. மானசீகமாக அவரை ஒரு குருவாக மனதில் வரிந்து கொண்ட போதும், என்றாவது அவரைச் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருந்ததில்லை.
இடையில் இரண்டு மூன்று முறை இந்தியா சென்றிருந்த போது, பார்வதிபுரம் போய் சாரைப் பாரத்துவிட்டு வருவோமா என்று மனதில் ஆசை எழுந்தாலும், ஆதர்ச ஆளுமைகளை நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று படித்திருந்ததாலும், அவரை நேரில் பார்த்து பேசும் அளவிற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று புத்தி ஆசையை அடக்க, அவரின் புத்தகங்களையோ, அவர் பரிந்துரைத்த புத்தகங்களையோ டவர் ஜங்ஷன் கிருஷ்ணா புக் ஸ்டாலில் வாங்கி கொண்டு வந்து விடுவேன்.
2022ல் ஜெமோ அமெரிக்கா வருகிறார், அதுவும் டாலஸ்ஸுக்கும் வரப் போகிறார் என்று அவர் தளத்தில் அறிவிப்பு வெளியான போது இம்முறை அவரைச் சந்திக்கலாம் என்று புத்தி அனுமதி கொடுக்கவே, ஆஸ்டின் சௌந்தர் அண்ணாவுக்கு கடிதம் எழுதி ஜெமோவைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக தெரியப்படுத்தி, அவரின் டாலஸ் நிகழ்ச்சி விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். மே 17, 2022, செவ்வாய்க்கிழமை, கோப்பெல் லைப்ரரி.
ஜெமோ சந்திப்பிற்காக நான் என் அமெரிக்க மேனஜரிடம் அரை நாள் விடுப்பு கோர, அவர் நான் என் ஆதர்ச எழுத்தாளரைச் சந்திக்க போகிறேன் என்பதைக் கேட்டு மிகுந்த ஆர்வத்துடன் தமிழைப் பற்றியும், ஜெமோவைப் பற்றியும் என்னிடமும், கொஞ்சம் கூகுளிலும் தெரிந்து கொண்டு ‘I’m proud of you, man! You have such a legacy and I’m glad you are still in touch with your roots’ என்றது பெருமையாக உணர்ந்த தருணம்.
நாம் மிகவும் மதிக்கும் ஒரு ஆளுமையை நேரில் சந்திக்க செல்லும்போது வெறும் கையோடு செல்வதா என்றெண்ணி, அவருக்கு எதையாவது பரிசளிக்கலாம் என்று நினைத்து வால்மார்ட்டிலும், டார்கெட்டிலும் இரண்டு மணிநேரம் கரங்கி முடிவெடுக்கமுடியாமல் குழம்பி, கடைசியில் மனைவிக்கு போனைப் போட்டேன். அச்சமயம் அவர் ஒரு ட்ரீட்மென்டுக்காக குழந்தையுடன் பெங்களூரில் தாய் வீட்டில் இருந்தார். நடுச்சாமத்தில் என் அழைப்பைக் கண்டு பதறி, என் மனைவி என் குழப்பத்தைக்கேட்டு சிரிப்பதா அழுவதா என்கிற நிலையில், ஜெயமோகன் அவர்கள் நிறைய பயணிப்பதால் அதற்கு உபயோகமாக இருக்கும்படி எதையாவது வாங்கினால் நன்றாக இருக்கும் என்று கூற, ஒரு சிறிய travel accessories bag வாங்கிக்கொண்டேன்.
அடுத்த நாள் ஜெமோ சந்திப்பு. இரவே அவருக்கு வாங்கிய அன்பளிப்பை gift wrap செய்து விட்டு அதையும், விஷ்ணுபுரம் புத்தகத்தையும் பேக்கில் வைத்து விட்டு ஒரு விதமான anxietyயோடே தூங்கப் போனேன்.
10 மணிக்கு ஜெமோ சந்திப்பு. 9:45க்கே லைப்ரரிக்கு சென்று விட்டேன். சுமார் 10 பேர் அதற்கு முன்னரே வந்து அங்கு காத்துக் கொண்டிருந்தனர். ஓரிருவர் கையில் பூங்கொத்து வைத்து இருந்தனர். சிலர் கைகளில் புத்தகங்கள்.
பெரும்பாலனவர்கள் கேஷுவலான உடையில் வந்து இருந்தது சற்று ஏமாற்றமே! ஒரு பெரும் ஆளுமையை சந்திக்கச் செல்லும்போது சிறப்பாக உடை அணிந்து செல்வது அவருக்கு நாம் அளிக்கும் மரியாதை. நம்மவர்களுக்கு அது ஏனோ புரிவதேயில்லை. ஒருமுறை ஜேசுதாஸ் அவர்கள் மலையாளிகள் அசோசியேஷன் நிகழ்ச்சிக்காக டாலஸ் வந்திருந்தபோது அவரைக் காண வந்திருந்த மலையாளிகள் அனைவரும் டிப் டாப்பாக ஃபார்மலாக உடை அணிந்து வந்திருந்ததை நினைத்துக் கொண்டேன். அது தாசேட்டனுக்கு அவர்கள் அளிக்கும் மரியாதையின் வெளிப்பாடு.
யாருடனும் பரிச்சயமில்லாததாலும், இயல்பான கூச்ச சுபாவத்தினாலும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் ஒரு பரபரப்பு. ஜெமோ வந்துவிட்டாரென. காத்திருந்த நாங்கள் அனைவரும் நூலகம் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டோம். ஓரிரு நிமிடங்களில் ஜெமோவும் அருண்மொழி மேடமும் அவர்கள் உள்வட்ட நண்பர்கள் புடைசூழ உள்ளே வந்தனர். மிக இயல்பாக, மெல்லிய புன்னகையுடன், approachable personality ஆக ஜெமோ வந்தார். ஏனோ ஜெமோவின் முகம் மறைந்துபோன, என் பிரியமான பெரியப்பாவை நொடிநேரம் ஞாபகப்படுத்தியது.
நான் படித்து வியந்த ஒரு ஆளுமை, வாழ்வின் பல விஷயங்களை அறிய வைத்த, ரசனயை கூர் படுத்திய, குரு ஸ்தானத்தில் மனதில் வைத்திருக்கும் ஒருவரை அன்று அத்தனை பக்கத்தில் பார்க்கிறோம் என்ற படபடப்பு அடங்கவே சில நிமிடங்கள் ஆனது.
ஒரு வாசகி கடவுள் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவர் கர்ப்பிணியாக இருந்ததாக நினைவு.
கேள்வி பதில் ஃபார்மெட்டில் அமைந்த நிகழ்வென்பதால், கேள்விகளைக் கேட்கலாம் என்று கூற, முதல் வரிசையில் அமர்ந்து இருந்த ஒரு பெண்மணி, ‘நீங்கள் சமஸ்கிருதத்தை செத்த பாஷை என’ என ஆரம்பிக்க, ஜெமோ உடனே குறுக்கிட்டு, நான் எங்கே எப்போது அப்படி சொன்னேன் என்று அந்த பெண்ணிடம் கேட்க, அவர் ஏதோ சொல்ல திக்கித் தடுமாற, ஜெமோ தனக்கே உரிய பாணியில் எப்படி சமஸ்கிருதம் தொடர்பு மொழியாக இருந்ததே தவிர அது எப்போதுமே common man’s language ஆக இருந்ததில்லை என்பதையும் அதற்கான காரணத்தையும் பொறுமையாக விளக்கினார். இந்த மனிதர் நாற்பதாண்டுகளுக்கு மேலாக, தமிழ்ச்சூழலில் இதைப் போல் எத்தனை தத்தித்தனமான கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார். விரக்தி அடையாமல் இன்னும் கூட இதைப் போன்ற கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்கிறார் என்றால் இந்த மனிதர்கள் மேல் அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. அதற்குப் பிறகு வழக்கமான வாசகர் கேள்விகள். அவரை நெடுநாள் வாசிக்கும் நண்பர்களுக்குத் தெரியும் கொஞ்சம் தேடினால் அவர் தளத்திலேயே நமக்கான பதில்கள் எங்கோ ஒளிந்திருக்கும் என்று. கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் தமிழை வளர்ப்பது எப்படி என்ற ரீதியில் ஏதோ கேட்க, எனக்கு நிஜமாகவே யார் இவர்கள், எங்கிருந்து வருகிறார்கள், யாரிடம் கேட்கிறோம், என்ன கேட்கிறோம் என்ற எந்த லஜ்ஜையும் இல்லாமல் எப்படி இவர்களால் ஒரு அரங்கில் ஒரு பெரும் ஆளுமையிடம் இம்மாதிரி கேள்வி கேட்க தோன்றுகிறது என இருந்தது. அதன் பின்னே பெருவாரியான நேரத்தை St.Louisல் இருந்து வந்திருந்த ஒரு அன்பரும் RJ என அறிமுகப்படுத்திக் கொண்ட இன்னொரு அன்பருமே எடுத்துக் கொண்டனர். ஜெவின் பேச்சைக் கேட்க வந்தோமா, இவர்கள் இருவரின் பேச்சைக் கேட்க வந்தோமா என லேசாக சலிப்படைய ஆரம்பிக்கும் போது ராலே ராஜன் நேரமாகிக்கொண்டிருக்கிறது என்று வந்து காப்பாற்றினார்.
கேள்வி பதில் முடிந்து ஜெவிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் அறிவிக்க, வழக்கம் போல், நம்மவர்கள் ஜெவை மொய்த்துக்கொள்ள, விஷ்ணுபுரம் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு, வரிசை மாதிரி ஒன்றில் நானும் சேர்ந்து கொண்டேன். எதேச்சையாக புத்தகத்தை புரட்டிப்பார்த்த எனக்கு பேரதிர்ச்சி! என் மூன்று வயதுப் பையன் அதில் தன் கைங்கர்யத்தை காட்டியிருந்தான். ‘அய்யோ மகனே, பொக்கிஷம் போல வைத்திருந்த புத்தகத்தில் எப்போதடா இந்த கிறுக்கல் காரியத்தைப் பண்ணினாய்’ என மகனை நினைத்துக்கொண்டு, இதை எப்படி ஜெமோவிடம் காண்பித்து ஆட்டோகிராப் வாங்குவது, ஒருவேளை புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து இது கண்ணில் பட்டால் தப்பாக நினைத்துக்கொள்ள மாட்டாரா என்றெண்ணி, நைசாக அந்த வரிசையில் இருந்து நழுவி பக்கத்தில் அருண்மொழி மேடமை சுற்றியிருந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டேன். பார்ப்பதற்கு ஊரில் பக்கத்து வீட்டு அக்காக்களைப் போலிருந்ததால் குருவைப் பார்க்கும் போது இருக்கும் பயம் கலந்த மரியாதைப் போலன்றி அவரிடம் இயல்பாக பேச முடிந்தது. அவரிடம் நான் கொண்டுபோயிருந்த கிஃப்டைக் கொடுக்க, அவரோ ‘அய்யே, அவர்தாங்க ரைட்டர், அவர்கிட்ட கொடுங்க’ எனச்சொல்ல ‘பரவாயில்லை மேடம், சாரைச் சுற்றி கூட்டம் அதிகமாக இருக்கிறது’ என்று சொல்லி அவரிடமே கொடுத்துவிட்டு, வந்த மட்டுக்கு ஜெமோவோடு ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்வோம் என்று வரிசையில் நின்று ஜெமோவோடு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து ஜெமோவை மதிய உணவுக்கு ஒரு மெக்ஸிகன் உணவகத்துக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும், விருப்பமுள்ள வாசகர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவித்தனர். Chipotle விட்டால், வேறு மெக்ஸிகன் உணவு நமக்கு ஒத்து வராது என்பதாலும், அலுவலகம் போகவேண்டியிருந்ததாலும் அங்கிருந்து நான் விடை பெற்றுக்கொண்டேன்.
இந்த வருடம் ஜெமோ மீண்டும் டாலஸ் வர இருக்கிறார். இம்முறை என் பையனை அழைத்துக்கொண்டு போகவேண்டும், அவரிடம் அவனை ஆசிர்வதிக்க கேட்டுக்கொள்ள வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன். ஆறு வயதான அவனுக்கு ஜெமோவின் பேச்சு புரியாமல் போகலாம், ஆனால் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் ஆளுமையைப் பார்த்து அவனுக்கு ஒரு inspiration கிடைக்கலாம்.
விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு, ஜெமோ முன்னெடுத்துச் செல்லும் இலக்கிய பயணத்தில் உங்களில் பெரும்பாலோர் அவருக்கு மிக அணுக்கமானவர்கள், அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் முன் வரிசையில் அவருடன் பயணிப்பவர்கள். நான் எங்கோ கடைக்கோடியில், தாமதாமாக அந்த பாதையை கண்டறிந்து பின்னால் வருபவன். எனவே பின்வருபவை என் தனிப்பட்ட அவதானிப்புகளே தவிர, அறிவுரை அல்ல. உங்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு வாசிப்பனுபவமோ, தகுதியோ எனக்கு இருப்பதாகவும் நான் நம்பவில்லை. 1) அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரை மேடைக்கு அழைத்துவருவதற்கு முன்பு அவரைப் பற்றி ஒரு presentation அல்லது சுருக்கமாக ஒரு documentary ஒட விடலாம். வருபவர்கள் அத்தனை பேருக்கும் ஜெமோவை தெரிந்து இருக்கும், அல்லது அவரை வாசித்திருப்பார்கள் என்று நம் தமிழ்ச்சூழலில் எதிர்பார்ப்பது நியாயமாகுமா? சில பேர் தமிழ் மீதான ஆர்வத்தில் வந்திருக்கலாம், சிலர் அவரை சினிமா மூலமாக அறிந்து ஏதோ ஆர்வத்தில் வந்திருக்கலாம். 2) அவர் கலந்துகொள்ளும் கலந்துரையாடல், கேள்வி பதில் மாதிரியான நிகழ்ச்சிகளை விஷ்ணுபுரம் நண்பர்கள் யாராவது moderate செய்தால் தத்தித்தனமான கேள்விகளையும், ஓரிருவர் மொத்த நிகழ்ச்சியயையும் hijack செய்வதையும் தவிர்க்க அது உதவும். 3) சினிமா நட்சத்திரங்களை சுற்றி வளையம் அமைத்து வரும் bouncers போலயோ, தொண்டர் படை சூழ வரும் நம்மூர் அரசியல்வாதிகளைப் போல் அவரைச் சூழ்ந்து வருவதை தவிர்க்கலாம். 4) பெரும்பாலன நிகழ்ச்சிகள் நூலக அரங்குகளிலேயே நடை பெறுவதால், ஜெமோவின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை அந்நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கலாம். தமிழில் படிக்கத் தெரியாத நம் இளைய தலைமுறைக்கும், பிற மொழி, இனத்தவர்களுக்கும் அவர் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களை கொண்டுச் செல்ல எளிதாக இருக்கும்.