நுலக அனுபவம்

பள்ளிப் பருவத்தில், நான் படித்த அரசுப்பள்ளியில் நூலகம் என்ற ஒன்று இருக்கவில்லை. எங்களூரில் ஒரு வாசிப்பு சாலை இருந்தது. நாளிதழ்கள், வார இதழ்களுக்கு மேலே புத்தகங்கள் என்று பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக அங்கு எதுவும் இருந்ததாக நினைவில்லை.

பதின்வயதில் நானாக பஸ் ஏறி நாகர்கோவில் செல்ல ஆரம்பித்த பின் செய்த முதல் காரியம், நாகர்கோவில் மைய நூலகத்தில் உறுப்பினர் அட்டை வாங்கியது. அப்போது மைய நூலகம் ஒழுகினசேரி டென்னிஸ் கிளப் அருகே ஒரு பழைய இரண்டு அடுக்கு கட்டிடத்தில் இருந்தது. கீழ்தளத்தில் நாளிதழ்களும், மேகஸின்களும், மேல் தளத்தில் புத்தகங்களும். எப்போதும் கீழ்தளத்தில் தூங்கி வழிந்தும், சோர்ந்த கண்களுடனும் சிலர் இருப்பார்கள். பெரும்பாலும் மத்திய வயதை கடந்தவர்கள் அல்லது வயசாளிகள். unwelcoming ambience என்பதை அந்த ஹாலின் எல்லா பக்கமும் உணரலாம். அதைத்தாண்டி மேல்தளம் சென்றால், அங்கே ஒரு அம்மணி (லைப்ரரியன்) உக்கிரமான பெண்தெய்வங்களை நினைவுறுத்துவது போல, எதற்காக வந்தாய் என்பது போல அமர்ந்திருப்பார். அவரைத்தாண்டிச் சென்றால் ஆறு புத்தக ரேக்குகள். ஒருவர் மட்டுமே சென்று வர இடைவெளி இருக்கும். கிட்டதட்ட அரை இருட்டில், காற்றே வராத அந்த இடத்தில் புத்தகங்களை தேடி எடுத்து வரும்போது வியர்வையில் நனைந்து பரிதாபமான ஒரு நிலையில் இருப்பேன். இப்போது யோசித்துப்பார்க்கும் போது அந்த அம்மணி எப்போதும் கோப நிலையில் இருந்ததின் காரணம் புரிகிறது. ஒருவர் தினமும் எட்டு மணி நேரம் அந்த இடத்தில் இருந்து வேலை செய்வது என்பது கிட்டதட்ட தன்டணையே தான்.

வேலை நிமித்தம் அமெரிக்கா வந்த பின், இதுவரை ஐந்து வெவ்வேறு மாகாணங்களில், வெவ்வேறு ஊர்களில் வசித்திருக்கிறேன். அந்த ஊர்களின் நூலகங்களை நன்றாக உபயோகித்திருக்கிறேன். எந்த ஓரு நூலகத்திலும் unwelcoming ஆக உணர்ந்ததேயில்லை. மாறாக, எல்லா நூலகங்களுமே வாசகர்கள் வர வேண்டும், குடும்பமாக வர வேண்டும், குழந்தைகளோடு வர வேண்டும் என்ற ரீதியிலேயே செயல்படுகிறார்கள். குழந்தைகளுக்கான தனி section இல்லாத எந்த நூலகத்தையும் இங்கு பார்த்ததேயில்லை. குழந்தைகளை சிறு வயதிலேயே புத்தகங்களுக்கும் நூலகங்களுக்கும் அறிமுகப்படுத்துவதால் அந்த குழந்தைகளும் நல்ல manners and maturity யோடு வளர்கிறார்கள்.

சமீபத்தில் ஃப்ரிஸ்கோ நூலகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. புதியதாக கட்டப்பட்ட இந்த நூலகம் architecture மற்றும் kid-centric approachக்காக தேசிய அளவில் பேசப்பட்டது.

Rexy, a giant 21 foot tall T-rex replica remains on the floor of Frisco Public Library on Tuesday, March 14, 2023, in Frisco.

என்னைப்போன்ற பின்புலத்திலிருந்து வரும் ஒருவனுக்கு இந்த நூலகம் அளிக்கும் ஆச்சர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. நான் சென்றது ஒரு ஞாயிறு காலை. அப்போது கூட எத்தனை எத்தனை குழந்தைகள், குடும்பங்கள் நூலகம் நோக்கி வருவதை காணும் போது மனதில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி, கூடவே ஒரு ஏக்கம் என்றாவது நம்மூரிலும் இதைப்போல் குழந்தைகளும் உபயோகிக்கும் வண்ணம் நூலகங்கள் வராதா என்று.

கைகாரி தோசை!

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘ஒரு சாதம்’ கதையை படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. படிக்க எளிமையான ஆனால் மிக சுவாரஸ்யமான கதை. அ.முத்துலிங்கம் அவர்கள் ஒரு master story teller என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை சொல்லலாம், ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் இது ஒன்று. ஒரு சிறுகதைக்குள்ளே எத்தனை தகவல்கள், உட்கதைகள். கதைக்குள்ளே அவ்வையார் வருகிறார், காந்தி வருகிறார், ராமாயணம் வருகிறது, benzene அணு அடுக்கு முறை வருகிறது, முருகனின் சூரசம்ஹாரம் வருகிறது, chaos theory வருகிறது, கம்பியுட்டர் ப்ரோக்கிரம் வருகிறது. கொஞ்சமும் தொய்வில்லாத நடையில் எழுதபட்ட, எத்தனை முறை படித்தாலும் சலிக்காத கதை. இந்த கதை கிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்பது ஆச்சர்யமே.

சமீபத்தில் டாலஸ் நகர விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட வாசகர் சந்திப்பு கலந்துரையாடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளில் இதுவும் ஒன்று. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில், அதுவும் அ.முத்துலிங்கம் அவர்களின் கதையைப் படிக்க பரிந்துரைத்த வாசகர் வட்ட நண்பர்களுக்கு நன்றி.

கதையின் தொடக்க பத்தியிலேயே, ‘வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனுமாக நின்றான்’, அதுவும் குளிர்காலத்தில் என்று படிக்கும்போதே, ‘ஆகா, நம் இனமடா’ என்று தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் குமரி, நெல்லை மாவட்டக்காரர்களைத்தவிர, மற்றவர்கள் சாரம் என்பதை லுங்கி என்றே அறிந்திருப்பார்கள்.

கதையின் துவக்கத்திலேயே கதை மாந்தர்களின் பின்புலம் மற்றும் அவர்களின் குணங்களை நுணுக்கமாக காட்டிவிட்டு கதை ஜெட் வேகத்தில் செல்கிறது. சிவலிங்கம் தன் ஆரம்ப கால கனடா அனுபவங்களை பகிரும்போது பரமனாதன் இடத்தில் நாமே இருந்து கேட்பது போலவே இருந்தது.

Choas theoryஐ அவ்வையாரின் ‘வரப்புயற’ பாட்டை கொண்டு விளக்கியிருப்பது அருமை. அதே போல, ‘ஜானகியைக் கவர்ந்த காதல் எங்கே ஒளிந்த்திருக்கிறது என்று ராவணுனுடைய உடலை கூரிய அம்பினால் ஒட்டை போட்டு, ஒட்டை போட்டு தடவிப் பார்த்ததாம் ராமனுடைய பாணம். அதுபோலத்தான் எங்கேயோ ஒளிந்திருக்கும் அந்த பிழையைத் துருவித் துருவி தேடிப் பார்க்கிறேன்.’ என்ற வரிகளைப் படிக்கும் போது, எப்படி இவரால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என்ற ஆச்சரியம் எழாமல் இல்லை.

கதையின் முடிவில், ‘oru sadham’ என்பது ஒரு சாதம் அல்ல, ஒரு சதம் என்பது தெளிவாகும் தருணத்தில்,பரமனாதனோடு சேர்ந்து நமக்கும் வரும் புன்னகை, கதையின் வெற்றி.

இந்தக் கதையை வாசிக்கும்போது எனக்கு ஒரு பழைய ஞாபகம் வந்தது. சுமார் பதினைந்து வடங்களுக்கு முன்பு நாங்கள் சிக்காகோவில் இருந்த போது, பக்கத்து ஊரில் ஒரு புதிய இந்தியன் ரெஸ்டாரண்ட் திறந்தார்கள். நண்பர்கள் அந்த புதிய இடத்தில் சாப்பிட்டுவிட்டு மிக நன்றாக இருக்கிறது என்று கூறவே, நானும் மனைவியும் ஒரு மாலை அங்கு சென்றோம். மெனு கார்டில் நிறய புதுப்புது ஐட்டங்கள். தோசை வரிசையில், புதிதாக கைகாரி தோசை என ஓன்று இருந்தது. வட இந்தியர்களால் நடத்தப்படும் ரெஸ்டாரென்ட் என்பதால் ‘Bikaniri’ போல கைகாரி ஏதோ ஊர் பெயராக இருக்கும் என்றெண்ணி மனைவி அதை ஆர்டர் செய்தார். சர்வரும் கைகாரி தோசை என்றே ஒப்பித்துவிட்டு சென்றார். சில நிமிடங்களில் தோசையும் வந்தது. நல்ல திட்டமான தோசை மேல் கேரட், பீட்ரூட், கொத்தமல்லி, கீரை எல்லாம் போட்டு.

அப்போது தான் எங்களுக்கு புரிந்தது, vegetable dosa எனபதைத்தான் அவர்கள் ‘kaikari dosa’ என்று போட்டிருக்கிறார்கள் என்று அதாவது காய்கறி தோசை!

‘oru sadham’,ஒரு சாதம் ஆனதைப்போல, ‘kaikari dosa’ஐ கைகாரி தோசை என்று படித்த எங்களை நினைத்து சிரித்துக்கொண்டேன்!

இலக்கியச் சந்திப்பு

இலக்கியச் சந்திப்புகளில் பங்குபெறும் அளவிற்கு நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என்ற சந்தேகத்துடனேதான் ஞாயிறன்று ஃப்ரிஸ்கோ நூலகத்தில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கியவட்ட வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ள புறப்பட்டேன்.

சிறுவயதிலிருந்து வாசிக்கும் பழக்கம் இருந்தும், முறையான பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாததும், கடந்த சில வருடங்களாக ஜெயமோகன் வலைத்தளத்தை தவிர தமிழில் வாசிப்பது மிகவும் குறைந்து விட்டதும் எனக்கு தயக்கத்தை உருவாக்கியது. நண்பர் செந்தில் அழைத்தபோது, “ஒருமுறை சென்று பார்த்துவிடலாமே” என்ற எண்ணத்துடன் அவரிடம் வருகிறேன் என சொன்னேன். அவர் என்னை வாட்ஸ்அப் குழுவில் சேர்த்ததும், பிரதீப் அவர்கள் அழைத்து கதைகளுக்கான சுட்டிகளை பகிர்ந்ததும் எனக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியது.


வாசிக்க வேண்டிய நான்கு கதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்:

  • அசோகமித்திரனின் ‘காந்தி’ மற்றும் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’
  • அ. முத்துலிங்கத்தின் ‘கடவுச்சொல்’ மற்றும் ‘ஒரு சாதம்’

சந்திப்பிற்கு நான்கு நாட்களே இருந்ததால், தினமும் இரவில் ஒரு கதை என்று முடிவெடுத்தேன்.
என் மனதிற்கு நெருக்கமானவர் முத்துலிங்கம் என்பதாலும், அவருடைய பல கதைகளை ஏற்கனவே வாசித்திருந்ததாலும் கடவுச்சொல் கதையிலிருந்து தொடங்கினேன்.

பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் வாசிப்பதைப் பார்த்து என் மனைவிக்கும் மகனுக்கும் ஆச்சரியம்!
அ.முத்துலிங்கத்தின் இரண்டு கதைகளும் எளிதாக வந்தது. வாசித்த பின் அவருக்கு ஒரு கடிதம் எழுதும் பழைய பழக்கத்தையும் மீட்டெடுத்தேன்.

அசோகமித்திரனின் கதைகளை வாசிக்கும் போதே “புரிகிற மாதிரி, புரியாத மாதிரி” என்ற மனநிலை. “சந்திப்பில் கேட்டு விளக்கமெடுத்துக்கொள்வோம்” என்று விட்டுவிட்டேன்.


ஞாயிறு காலை 9 மணிக்கு நிகழ்ச்சி. 8:55-க்கு ஃப்ரிஸ்கோ நூலகத்தை வந்தடைந்தேன். ஏற்கனவே வாசகர் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். நூலகம் திறந்ததும் நாங்கள் எட்டு பேர் ஒரு குழுவாக உள்ளே சென்றோம். வெங்கட் பின்னர் இணைந்து கொண்டார்.
அன்னபூரணா அவர்கள் விநாயகரை பாடி நிகழ்ச்சியை தொடங்கினார்கள்.


கதைகள் மற்றும் கலந்துரையாடல்கள்

‘காந்தி’ பற்றி முதலில் விவாதம் நடைபெற்றது. பாலாஜி அவர்கள், அசோகமித்திரனின் எழுத்து “writer’s writer” எனக் குறிப்பிட்டு, பல அடுக்குகள் கொண்ட எழுத்துமுறையை விளக்கினார். மூர்த்தி மற்றும் பிரதீப், காந்தியின் பல பரிணாமங்களைப் பற்றியும், அவர் இன்றும் பேசப்படும் ஒருவராக இருக்கின்ற நிலைப்பாட்டையும் விவாதித்தனர். செந்தில், கசப்பும் கனிவும் கதையின் உள் நயமாக இருப்பதை வெளிப்படுத்தினார். நான் தவறாக புரிந்திருந்த ஒரு வரியை, மூர்த்தி தெளிவாக்கினார். பாலாஜி, ஜெமோவின் ‘இன்றைய காந்தி’ கட்டுரையை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ எனக்கு சற்று பிடிபடாமல் இருந்த கதை. ஆனால் செந்தில், ஐந்து குழந்தைகளை ஐம்புலன்கள், அல்லது பஞ்சபூதங்களாகலாம் என ஒரு புதிய பார்வையை வழங்கினார். மூர்த்தி, நடுத்தர வர்க்க மனநிலையை கதையின் வழியே விவரித்தார். பிரதீப், கதையின் ஒரு காட்சியை தேவதையின் தேடல் என ஓவியப்படுத்தினார்.

‘ஒரு சாதம்’ கதையை, ராதா அவர்கள் நினைவில் இருந்து ழுமையாகச் சொன்னது பிரமிப்பாக இருந்தது.ஒரு சதம் என்பது சிவலிங்கம் கடுமையான உழைப்பு, நேர்மை, புத்திக்கூர்மையால் முன்னுக்கு வரும் ஒரு சதம் பேரில் ஒருவன் என்ற perspective நான் முற்றிலும் எதிர்பாராதது. 

கடைசியாக, ‘கடவுச்சொல்’ . ஏன் கடவுச்சொல் என்ற தலைப்பு என்பதில் ஆரம்பித்து, எப்படி அது ஆப்ரஹாமின் பாவமன்னிப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று சென்றது. வெங்கட் இந்தக் கதை உணர்வுப்பூர்வமாக தன் பாட்டியை நினைவூட்டியதை பகிர்ந்து கொண்டார்.


என்ன கற்றுக்கொண்டேன்?

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்காவிட்டால், இத்தனை புதிய perspectives தெரிந்துக்கொள்ளாமலேயே போயிருப்பேன்! உண்மையில் இவர்கள் பேச்சைக் கேட்கும்போது எனக்குள்ளே ஆச்சர்யமும், பிரமிப்புமே மேலிட்டது. அபாரமான ஞாபக சக்தியும், செறிவான மற்றும் தொடர்ச்சியான வாசிப்பனுபவமும் கொண்ட நண்பர்கள் சூழ இரண்டு மணிநேரம் செலவிட்டது ஒரு புதிய அனுபவம்.

இவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட இன்னொரு விஷயம் அவர்கள் ஒரு சிறுகதையை கிட்டதட்ட மாடர்ன் ஆர்ட் போல பார்க்கும் விதம். மாடர்ன் ஆர்ட்டில் எப்படி ஒவ்வொரு தூரிகை தீற்றலுக்கும், வண்ணங்களுக்கும் உள் அர்த்தம் இருக்ககூடுமோ அதைப் போல கதைக்குள்ளும் இருக்கும், இருக்க வேண்டும் என்று ஆழ்ந்து பார்க்கின்றனர். அறிமுகமோ பயிற்சியோ இன்றி மாடர்ன் ஆர்ட்டை ரசிக்க முடியாது அதைப்போல அவர்கள் அனைவருக்கும் வாசிப்பில் பயிற்சி இருந்ததாகவே எனக்குப்பட்டது. என் வாசிப்பு முறை ரவிவர்மா ஓவியத்தை ரசிப்பது போல. சகுந்தலா, துஷ்யந்தன் வருகிறானா என்று திரும்பி பார்க்கிறாள் என்ற அளவில் ரவிவர்மா ஓவியத்தை பார்க்க, ரசிக்க, அனுபவிக்கத் தெரியும். ஆனால், இந்த நண்பர்கள் ஒரு படி மேலே போய் காளிதாசனின் சாகுந்தலத்தில் இருந்து மேற்கோள் காட்டும் அளவுக்கு ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் கொண்டவர்கள் என்று தோன்றியது.


நன்றிகள்

  • செந்திலுக்கு, இந்த வாசகர் வட்டத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும்
  • பிரதீப்பிற்கு, கதைகள் அனுப்பி, கலந்துரையாடலுக்கு வழிவகுத்ததற்கும்
  • மற்றும்
  • இவை அனைத்துக்கும் மையப்புள்ளியாக இருக்கும் ஜெயமோகன் அவர்களுக்கு.