கர்மாவின் கணக்கு

சில கதைகள் படித்த பின்பும் வெகு நேரம் நம் சிந்தனையை ஆட்கொண்டு பல்வேறு நினைவுகளைத் தூண்டி விட்டுவிடுவதைப் போல, சமீபத்தில் ஜெமோ எழுதிய காசும் பிறப்பும் சிறுகதையைப் படித்து விட்டு அதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்ததால், இந்த பதிவு.

சில வருடங்களுக்கு முன்பு விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த போது நானும் மனைவியும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் சென்றிருந்தோம். நாங்கள் சென்றபோது  அங்கு அதிகம் கூட்டம் இருக்கவில்லை. சொல்லப்போனால் நாங்கள் மட்டுமே அந்த நேரத்தில் இருந்தோம்.  அப்போது அங்கே ஒரு பெரியவர்  – கிட்டத்தட்ட 70களில் இருக்கலாம்.  பார்ப்பதற்கு நல்ல வெள்ளை நிறத்தில், தேஜஸ் உடன், அரசாங்க அல்லது பேங்க் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர் போல இருந்தார்.  போத்தியாக இருக்கக்கூடும் என்று  நான் கணித்தேன், ஆனால் அவர்  கோயிலில் வேலை செய்பவர் அல்ல.  அவர் நடை உடை பாவனைகளிலிருந்து அவர் உள்ளூர்க்காரராக இருக்க வாய்ப்பில்லை என்றே மனம் சொல்லியது.  அவராகவே எங்களை நோக்கி வந்து கோவிலைப் பற்றி எங்களுக்கு விளக்க ஆரம்பித்தார். கோயில் ஸ்தல புராணம், கோயில் கட்டப்பட்ட விதம், திருவட்டாரு வரலாறு,  திருவட்டார் கோவிலுக்கும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கும் உள்ள  தொடர்பு என்று எக்கச்சக்கமாக தகவல்களை எங்களுக்கு சொல்லிக் கொண்டே வந்தார். நம்மாழ்வாருக்கும் அந்த கோயிலுக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறி திருப்பாவையிலிருந்து ஒரு பாடலையும்  அருமையாக பாடினார். நான் ஓரளவு திருவட்டார் பற்றி அறிந்திருந்தேன் ஆனால் அவர் கூறிய தகவல்கள் மிகுந்த ஆச்சரியத்தை கொடுப்பதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு கைடு செய்ய வேண்டிய வேலையை அந்த பெரியவர்  தன்னார்வத்தோடு செய்து கொண்டிருந்தார். கோவிலை சுற்றி முடித்து வரும் போது என் மனைவி என்னிடம் அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று  மெதுவாக ஆங்கிலத்தில் என்னிடம்  கூற,  எனக்கு சற்று தயக்கம். அப்பெரியவரைப் பார்க்க அவர் எதுவும் வாங்குபவர் போல தெரியவில்லை. மேலும் கேரள கோயில்களில் பொதுவாக தட்சிணையை எதிர்பார்ப்பதில்லை என்பதாலும்,  அவருக்கு ஏதாவது கொடுத்து அவரை அவமதித்துவிடக்கூடாது என்று எனக்கு பயம்.  ஆனாலும் மனைவி  அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்  என்று விரும்பியதால் சரி என்று ஒப்புக் கொண்டேன்.  என் மனைவியும் 100 ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்ட,  அவர் அதை சற்றும்  எதிர்பார்க்காதவர் போல  திடுக்கிட்டு  எங்களைப் பார்த்த அந்த நொடியிலே  எனக்கு புரிந்து விட்டது அவர் அதை ஒரு இன்சல்ட் ஆக எடுத்துக் கொண்டார் என்று. நான் உடனே அவரிடம் சாரி என்று மன்னிப்பு கூற, அதுவரை இருந்த இனிமை அவர் முகத்திலிருந்து விலகி, ஒருவித கோபத் தொனியில் அவர் எங்களிடம் ‘எனக்கு வேண்டுமானதை ஆதிகேசவன் எனக்கு கொடுத்திருக்கிறான். நீங்கள் ஏதாவது கொடுக்க விரும்பினால் கோயிலுக்கு கொடுங்கள்’ என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டார். எங்கள் இருவருக்கும் மிகுந்த மன வருத்தமாகிவிட்டது.  அவ்வளவு நேரம் கோவில் பற்றி அவரின் மூலமாக எத்தனையோ விஷயங்களை தெரிந்து கொண்டோம் ஆனால் கடைசியில் அவரை புண்படுத்தி விட்டோமே என்று  வருந்தினோம். திரும்பி வரும்போது யோசித்துக் கொண்டே வந்தேன் அந்த வயதில் அத்தனை ஒரு தன்னார்வத்தோடு, எந்த பிரதிபலனும் எதிர்பாராது, அவர் அந்த வேலையை எடுத்து செய்யக் காரணம் என்ன. தன்மீட்சி போல அவருக்கும் ஏதாவது காரணம் இருக்கக் கூடுமா இல்லை நம் சிறு மனம்தான் எல்லாவற்றிற்கும் ஏதாவது காரணம் தேடுகிறதா என்று. 

காசும் பிறப்பும் கதையைப் படித்தவுடன் இந்த சம்பவம் ஏனோ ஞாபகம் வந்தது. சுப்பையருடன் புதையலைக் கண்ட கதைசொல்லியால் எப்படி தனக்கென யோசிக்காமல், ஆனைத்தலைப்பிள்ளை செய்த பாவங்களுக்கு தான் செய்யும் பரிகாரமாக இருக்கட்டும் என்று எண்ணி புதையலை மூடி வைத்தாரா அல்லது கோவில் சொத்து குல நாசம் என்பதால், வரும் தலைமுறைக்கு பாவத்தைச் சேர்த்து வைக்க வேண்டாம் என்று புதையலை மூடி வைத்தாரா என பல கேள்விகள்.

Leave a comment