கர்மாவின் கணக்கு

சில கதைகள் படித்த பின்பும் வெகு நேரம் நம் சிந்தனையை ஆட்கொண்டு பல்வேறு நினைவுகளைத் தூண்டி விட்டுவிடுவதைப் போல, சமீபத்தில் ஜெமோ எழுதிய காசும் பிறப்பும் சிறுகதையைப் படித்து விட்டு அதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்ததால், இந்த பதிவு.

சில வருடங்களுக்கு முன்பு விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த போது நானும் மனைவியும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் சென்றிருந்தோம். நாங்கள் சென்றபோது  அங்கு அதிகம் கூட்டம் இருக்கவில்லை. சொல்லப்போனால் நாங்கள் மட்டுமே அந்த நேரத்தில் இருந்தோம்.  அப்போது அங்கே ஒரு பெரியவர்  – கிட்டத்தட்ட 70களில் இருக்கலாம்.  பார்ப்பதற்கு நல்ல வெள்ளை நிறத்தில், தேஜஸ் உடன், அரசாங்க அல்லது பேங்க் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர் போல இருந்தார்.  போத்தியாக இருக்கக்கூடும் என்று  நான் கணித்தேன், ஆனால் அவர்  கோயிலில் வேலை செய்பவர் அல்ல.  அவர் நடை உடை பாவனைகளிலிருந்து அவர் உள்ளூர்க்காரராக இருக்க வாய்ப்பில்லை என்றே மனம் சொல்லியது.  அவராகவே எங்களை நோக்கி வந்து கோவிலைப் பற்றி எங்களுக்கு விளக்க ஆரம்பித்தார். கோயில் ஸ்தல புராணம், கோயில் கட்டப்பட்ட விதம், திருவட்டாரு வரலாறு,  திருவட்டார் கோவிலுக்கும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கும் உள்ள  தொடர்பு என்று எக்கச்சக்கமாக தகவல்களை எங்களுக்கு சொல்லிக் கொண்டே வந்தார். நம்மாழ்வாருக்கும் அந்த கோயிலுக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறி திருப்பாவையிலிருந்து ஒரு பாடலையும்  அருமையாக பாடினார். நான் ஓரளவு திருவட்டார் பற்றி அறிந்திருந்தேன் ஆனால் அவர் கூறிய தகவல்கள் மிகுந்த ஆச்சரியத்தை கொடுப்பதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு கைடு செய்ய வேண்டிய வேலையை அந்த பெரியவர்  தன்னார்வத்தோடு செய்து கொண்டிருந்தார். கோவிலை சுற்றி முடித்து வரும் போது என் மனைவி என்னிடம் அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று  மெதுவாக ஆங்கிலத்தில் என்னிடம்  கூற,  எனக்கு சற்று தயக்கம். அப்பெரியவரைப் பார்க்க அவர் எதுவும் வாங்குபவர் போல தெரியவில்லை. மேலும் கேரள கோயில்களில் பொதுவாக தட்சிணையை எதிர்பார்ப்பதில்லை என்பதாலும்,  அவருக்கு ஏதாவது கொடுத்து அவரை அவமதித்துவிடக்கூடாது என்று எனக்கு பயம்.  ஆனாலும் மனைவி  அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்  என்று விரும்பியதால் சரி என்று ஒப்புக் கொண்டேன்.  என் மனைவியும் 100 ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்ட,  அவர் அதை சற்றும்  எதிர்பார்க்காதவர் போல  திடுக்கிட்டு  எங்களைப் பார்த்த அந்த நொடியிலே  எனக்கு புரிந்து விட்டது அவர் அதை ஒரு இன்சல்ட் ஆக எடுத்துக் கொண்டார் என்று. நான் உடனே அவரிடம் சாரி என்று மன்னிப்பு கூற, அதுவரை இருந்த இனிமை அவர் முகத்திலிருந்து விலகி, ஒருவித கோபத் தொனியில் அவர் எங்களிடம் ‘எனக்கு வேண்டுமானதை ஆதிகேசவன் எனக்கு கொடுத்திருக்கிறான். நீங்கள் ஏதாவது கொடுக்க விரும்பினால் கோயிலுக்கு கொடுங்கள்’ என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டார். எங்கள் இருவருக்கும் மிகுந்த மன வருத்தமாகிவிட்டது.  அவ்வளவு நேரம் கோவில் பற்றி அவரின் மூலமாக எத்தனையோ விஷயங்களை தெரிந்து கொண்டோம் ஆனால் கடைசியில் அவரை புண்படுத்தி விட்டோமே என்று  வருந்தினோம். திரும்பி வரும்போது யோசித்துக் கொண்டே வந்தேன் அந்த வயதில் அத்தனை ஒரு தன்னார்வத்தோடு, எந்த பிரதிபலனும் எதிர்பாராது, அவர் அந்த வேலையை எடுத்து செய்யக் காரணம் என்ன. தன்மீட்சி போல அவருக்கும் ஏதாவது காரணம் இருக்கக் கூடுமா இல்லை நம் சிறு மனம்தான் எல்லாவற்றிற்கும் ஏதாவது காரணம் தேடுகிறதா என்று. 

காசும் பிறப்பும் கதையைப் படித்தவுடன் இந்த சம்பவம் ஏனோ ஞாபகம் வந்தது. சுப்பையருடன் புதையலைக் கண்ட கதைசொல்லியால் எப்படி தனக்கென யோசிக்காமல், ஆனைத்தலைப்பிள்ளை செய்த பாவங்களுக்கு தான் செய்யும் பரிகாரமாக இருக்கட்டும் என்று எண்ணி புதையலை மூடி வைத்தாரா அல்லது கோவில் சொத்து குல நாசம் என்பதால், வரும் தலைமுறைக்கு பாவத்தைச் சேர்த்து வைக்க வேண்டாம் என்று புதையலை மூடி வைத்தாரா என பல கேள்விகள்.

கைகாரி தோசை!

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘ஒரு சாதம்’ கதையை படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. படிக்க எளிமையான ஆனால் மிக சுவாரஸ்யமான கதை. அ.முத்துலிங்கம் அவர்கள் ஒரு master story teller என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை சொல்லலாம், ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் இது ஒன்று. ஒரு சிறுகதைக்குள்ளே எத்தனை தகவல்கள், உட்கதைகள். கதைக்குள்ளே அவ்வையார் வருகிறார், காந்தி வருகிறார், ராமாயணம் வருகிறது, benzene அணு அடுக்கு முறை வருகிறது, முருகனின் சூரசம்ஹாரம் வருகிறது, chaos theory வருகிறது, கம்பியுட்டர் ப்ரோக்கிரம் வருகிறது. கொஞ்சமும் தொய்வில்லாத நடையில் எழுதபட்ட, எத்தனை முறை படித்தாலும் சலிக்காத கதை. இந்த கதை கிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்பது ஆச்சர்யமே.

சமீபத்தில் டாலஸ் நகர விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட வாசகர் சந்திப்பு கலந்துரையாடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளில் இதுவும் ஒன்று. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில், அதுவும் அ.முத்துலிங்கம் அவர்களின் கதையைப் படிக்க பரிந்துரைத்த வாசகர் வட்ட நண்பர்களுக்கு நன்றி.

கதையின் தொடக்க பத்தியிலேயே, ‘வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனுமாக நின்றான்’, அதுவும் குளிர்காலத்தில் என்று படிக்கும்போதே, ‘ஆகா, நம் இனமடா’ என்று தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் குமரி, நெல்லை மாவட்டக்காரர்களைத்தவிர, மற்றவர்கள் சாரம் என்பதை லுங்கி என்றே அறிந்திருப்பார்கள்.

கதையின் துவக்கத்திலேயே கதை மாந்தர்களின் பின்புலம் மற்றும் அவர்களின் குணங்களை நுணுக்கமாக காட்டிவிட்டு கதை ஜெட் வேகத்தில் செல்கிறது. சிவலிங்கம் தன் ஆரம்ப கால கனடா அனுபவங்களை பகிரும்போது பரமனாதன் இடத்தில் நாமே இருந்து கேட்பது போலவே இருந்தது.

Choas theoryஐ அவ்வையாரின் ‘வரப்புயற’ பாட்டை கொண்டு விளக்கியிருப்பது அருமை. அதே போல, ‘ஜானகியைக் கவர்ந்த காதல் எங்கே ஒளிந்த்திருக்கிறது என்று ராவணுனுடைய உடலை கூரிய அம்பினால் ஒட்டை போட்டு, ஒட்டை போட்டு தடவிப் பார்த்ததாம் ராமனுடைய பாணம். அதுபோலத்தான் எங்கேயோ ஒளிந்திருக்கும் அந்த பிழையைத் துருவித் துருவி தேடிப் பார்க்கிறேன்.’ என்ற வரிகளைப் படிக்கும் போது, எப்படி இவரால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என்ற ஆச்சரியம் எழாமல் இல்லை.

கதையின் முடிவில், ‘oru sadham’ என்பது ஒரு சாதம் அல்ல, ஒரு சதம் என்பது தெளிவாகும் தருணத்தில்,பரமனாதனோடு சேர்ந்து நமக்கும் வரும் புன்னகை, கதையின் வெற்றி.

இந்தக் கதையை வாசிக்கும்போது எனக்கு ஒரு பழைய ஞாபகம் வந்தது. சுமார் பதினைந்து வடங்களுக்கு முன்பு நாங்கள் சிக்காகோவில் இருந்த போது, பக்கத்து ஊரில் ஒரு புதிய இந்தியன் ரெஸ்டாரண்ட் திறந்தார்கள். நண்பர்கள் அந்த புதிய இடத்தில் சாப்பிட்டுவிட்டு மிக நன்றாக இருக்கிறது என்று கூறவே, நானும் மனைவியும் ஒரு மாலை அங்கு சென்றோம். மெனு கார்டில் நிறய புதுப்புது ஐட்டங்கள். தோசை வரிசையில், புதிதாக கைகாரி தோசை என ஓன்று இருந்தது. வட இந்தியர்களால் நடத்தப்படும் ரெஸ்டாரென்ட் என்பதால் ‘Bikaniri’ போல கைகாரி ஏதோ ஊர் பெயராக இருக்கும் என்றெண்ணி மனைவி அதை ஆர்டர் செய்தார். சர்வரும் கைகாரி தோசை என்றே ஒப்பித்துவிட்டு சென்றார். சில நிமிடங்களில் தோசையும் வந்தது. நல்ல திட்டமான தோசை மேல் கேரட், பீட்ரூட், கொத்தமல்லி, கீரை எல்லாம் போட்டு.

அப்போது தான் எங்களுக்கு புரிந்தது, vegetable dosa எனபதைத்தான் அவர்கள் ‘kaikari dosa’ என்று போட்டிருக்கிறார்கள் என்று அதாவது காய்கறி தோசை!

‘oru sadham’,ஒரு சாதம் ஆனதைப்போல, ‘kaikari dosa’ஐ கைகாரி தோசை என்று படித்த எங்களை நினைத்து சிரித்துக்கொண்டேன்!