பட்டாம்பூச்சி விளைவு

சரியாக பத்து நாட்கள் ஆகிறது – ஜெயமோகன் தளத்தில் ‘டாலஸ் சந்திப்பு’ தலைப்பில் நண்பர் ப்ரதீப் அவர்களின் பதிவைப் படித்து. 

ஜெமோ தன் தளத்தில் கடிதங்களை வெளியிடும்போது, பெரும்பாலும்   புகைப்படங்களுடன் சேர்த்து  வெளியிடுவதைக் கண்டு முன்பெல்லாம் நான் நினைத்ததுண்டு, எதற்காக புகைப்படங்களையும் சேர்த்து வெளியிடுகிறார் என. ஆனால் அந்த பதிவில் அவர் ‘டாலஸ் சந்திப்பு’ புகைப்படத்தை இணைத்திருக்காவிட்டால் கீழ் வரும் எதுவுமே நடந்திருக்காமல் போயிருக்கலாம். 

அந்த புகைப்படத்தை பார்த்த உடனே அதில் இருந்த செந்தில் அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். செந்தில் நான் வசிக்கும் அதே பகுதியில் வசிப்பவர் மற்றும் இருமுறை அப்பகுதி தமிழர்கள் கூடிச் சந்தித்த போது அறிமுகம். பழகுவதற்கு எளிமையானவர், இனிமையானவர் என்பதோடு எங்கள் பக்கத்து மாவட்டத்துக்காரர் என்பதால் மனதில் பதிந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவரைப் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது. அவர் தனக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்றோ, தான் யூடூபில் திருக்குறள் சேனல் நடத்திவருவது குறித்தோ அந்த இரு சந்திப்புகளிலும் காட்டிக் கொள்ளவில்லை (அல்லது நான் கவனித்திருந்திருக்கவில்லை). அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  The universe listens என்பது போல, அடுத்த நாளே, அவர் எங்கள் பகுதி வாட்ஸாப் தமிழ்க் குழுவில், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பாக நடக்க இருக்கும் கம்ப ராமாயணக் கச்சேரி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட, அவர் நம்பரைக் குறித்துக் கொண்டு அவருக்கு ஒரு மெசஜ் தட்டலாம் என டைப் செய்துக் கொண்டிருக்கும் போதே, ஏதோ வேலை வர, அவசரத்தில் தவறுதலாக, அறைகுறை மெசஜ் அவருக்கு  போய்விட, அதை உடனடியாக டெலிட் செய்து விட்டு வேலையில் மூழ்கி விட்டேன். 

சாயங்காலமாக அவரிடமிருந்து ஒரு குறுந்செய்தி ‘தொடர்பு கொள்ள முயற்சி செய்தீர்களா’ என. உடனே அவரை போனில் அழைத்து ‘நீங்க திருநெல்வேலி செந்தில் தானே, நான் கணேஷ், நாகர்கோவில், இதற்கு முன்பு இருமுறை சந்தித்திருக்கிறோம்’ என அறிமுகப்படுத்திக் கொள்ள, அவர் ‘உங்கள் குரலை வைத்து அடையாளம் தெரிகிறது’ என்க, மலையாள வாசம் வீசும் நம் தமிழைத்தான் அப்படி நளினமாக சொல்கிறார் என நினைத்து லேசாக மனதில் சிரித்துக் கொண்டே, அவரிடம் நான் ஜெயமோகன் தளத்தை வாசிப்பதைக் குறித்தும், அதில் அவரின் புகைப்படத்தைப் பார்த்ததையும் சொன்னேன். அவருக்கும் ஆச்சர்யம். அவர் டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரு வாரங்களுக்கு ஓரு முறை நூலகங்களில் சந்தித்து உரையாடுவதைப் பற்றி கூறி, வரும் ஞாயிறன்றும் ஃப்ரிஸ்கோ நூலகத்தில் கூட இருப்பதாகவும், முடிந்தால் வாருங்களேன் என அழைக்க, இலக்கியச் சந்திப்புகளில் பங்குபெறும் அளவிற்கு நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என்று உள்ளுக்கள்ளே ஒரு கேள்வி எழ, ஆனாலும் ஒருமுறை சென்று பார்க்கலாமே என்று அவரிடம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் வாட்சப் குரூப்பில் என்னை சேர்த்துவிடவும், சிறிது நேரத்தில் பிரதீப் அவர்கள் அழைத்து பேசினார்.

பிரதீப் அவர்களிடம் பேசும் போது நான் 2022ல் ஜெமோ டாலஸ் வந்திருந்த போது அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்ததைப் பற்றி கூற, அவர், ‘அப்படியா, அந்நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் இருந்தால் அனுப்புங்களேன், என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறதா எனப் பார்க்கிறேன்’ எனக் கூறி, வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் இலக்கியச் சந்திப்பு பற்றியும், டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றியும் சுருக்கமாக விளக்கினார். நான் நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என எனக்குள் இருக்கும் தயக்கத்தை வெளிப்படுத்த, ‘பரவாயில்லை, வாருங்கள். இது நட்பார்ந்த கலந்துரையாடல்’ என்று ஊக்கப்படுத்தினார். சிறிது நேரத்திலேயே ஞாயிறன்று கலந்துரையாடுவதற்கான நான்கு கதைகளின் சுட்டியையும் கொடுத்து உதவினார். 

அந்த இலக்கியச் சந்திப்பிற்குப் பின் அவர்களிடமிருந்த ஏதோ ஒரு பொறி, என்னுள் அணைந்திருந்த கங்குகளை பற்ற வைத்ததைப் போல், மீண்டும் மீண்டும் அந்த கலந்துரையாடல் மனதுக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கவே, அதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளை பதிவு செய்யலாம் என்று தமிழில் தட்டச்சு செய்யலாம் என்று ஆரம்பித்து – கவனிக்க, நான் முன் பின்னே  தமிழில் தட்டச்சு செய்து பழக்கமில்லாதவன் – அது அப்படியே ஓரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வைத்தது. இப்போது திரும்பிப் பார்க்கும் போது, இந்த பத்து நாட்களில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழில் டைப் செய்துள்ளேன். தினமும் மீண்டும் தமிழில் படிக்க , ஆழ்ந்து படிக்க ஆரம்பித்துள்ளேன். 

உலகில் எங்கோ ஓரு மூலையில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடிப்பதற்கும், வேறொரு மூலையில் சுனாமி வருவதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பது போல, எங்கோ இருந்து ஜெமோ வெளியிட்ட ஒரு பதிவு என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை நினைத்துப் பார்க்கிறேன். 

எழுத்தாளர் ஜெயமோகன் சந்திப்பு – 2022

நாகர்கோவிலில் இருந்த காலங்களில், அதாவது எனது 21வது வயது வரை, ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களையோ அவரைப் பற்றியோ எதுவும் தெரியாமலேயே இருந்திருக்கிறேன் என்று இன்று நினைத்துப் பார்க்கும்போது கூச்சமாக இருக்கிறது. 

அப்போதெல்லாம் என் வாசிப்பு என்பது வெகுஜன பத்திரிக்கைகளில், முக்கியமாக விகடனில், எழுதி வந்த பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களைத்தாண்டி, நானாக லைப்ரரியில் இருந்த புத்தகங்களுக்குள் தேடிப் படித்த புத்தகங்கள் மட்டுமே. ஒரு வழிகாட்டியோ, துணையோ இல்லாமல் யார் யாரையோ வாசித்து வந்திருந்தேன். அடுத்த பத்தாண்டுகள் வேலை, வேலை சம்பந்தமாக வாசிப்பு, பெரும்பாலும் அபுனைவுகள் என்று ஓடிவிட்டது.  2010களில் அலுவலக வேலைகளை குறைந்த நேரத்தில் என்னால் செய்து முடித்து விட முடியும் என்று ஆன பின்பு, கைவசம் நிறைய நேரமும், இணைய வசதியும் இருக்க the old itch started. இணையத்தில் தமிழைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். Blogging தமிழில் பரவலாகியிருந்த அந்த காலகட்டத்தில் எங்கோ ஓருவர் ஜெமோவை வசை பாடி எழுதி வைத்து இருக்க, எதற்காக அவர் இப்படி வசைபாடப்பட்டிருக்கிறார் என்ற ஆர்வத்தில் ஜெயமோகன் தளத்திற்குள் நுழைந்தேன். Fell into the rabbit hole என்பதைப் போல அன்று ஆரம்பித்த பயணம். 

இப்படி ஒரு ஆளுமை நம் வீட்டிலிருந்து 15 நிமிட நேர தூரத்தில் இருந்திருக்கிறார்,இருக்கிறார் என்பது தெரிய வந்த போது நான் 15000 கிலோமீட்டர்கள் தாண்டி வந்திருந்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் தளத்தை வாசிப்பது ஒரு அன்றாடப் பழக்கமாகவே ஆகிப் போனது. மானசீகமாக அவரை ஒரு குருவாக மனதில் வரிந்து கொண்ட போதும், என்றாவது அவரைச் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருந்ததில்லை.  

இடையில் இரண்டு மூன்று முறை இந்தியா சென்றிருந்த போது, பார்வதிபுரம் போய் சாரைப் பாரத்துவிட்டு வருவோமா என்று மனதில் ஆசை எழுந்தாலும், ஆதர்ச ஆளுமைகளை நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று படித்திருந்ததாலும், அவரை நேரில் பார்த்து பேசும் அளவிற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று புத்தி ஆசையை அடக்க, அவரின் புத்தகங்களையோ, அவர் பரிந்துரைத்த புத்தகங்களையோ டவர் ஜங்ஷன் கிருஷ்ணா புக் ஸ்டாலில் வாங்கி கொண்டு வந்து விடுவேன். 

2022ல் ஜெமோ அமெரிக்கா வருகிறார், அதுவும் டாலஸ்ஸுக்கும் வரப் போகிறார் என்று அவர் தளத்தில் அறிவிப்பு வெளியான போது இம்முறை அவரைச் சந்திக்கலாம் என்று புத்தி அனுமதி கொடுக்கவே, ஆஸ்டின் சௌந்தர் அண்ணாவுக்கு கடிதம் எழுதி ஜெமோவைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக தெரியப்படுத்தி, அவரின் டாலஸ் நிகழ்ச்சி விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். மே 17, 2022, செவ்வாய்க்கிழமை, கோப்பெல் லைப்ரரி. 

ஜெமோ சந்திப்பிற்காக நான் என் அமெரிக்க மேனஜரிடம் அரை நாள் விடுப்பு கோர, அவர் நான் என் ஆதர்ச எழுத்தாளரைச் சந்திக்க போகிறேன் என்பதைக் கேட்டு மிகுந்த ஆர்வத்துடன் தமிழைப் பற்றியும், ஜெமோவைப் பற்றியும் என்னிடமும், கொஞ்சம் கூகுளிலும் தெரிந்து கொண்டு ‘I’m proud of you, man! You have such a legacy and I’m glad you are still in touch with your roots’ என்றது பெருமையாக உணர்ந்த தருணம்.

நாம் மிகவும் மதிக்கும் ஒரு ஆளுமையை நேரில் சந்திக்க செல்லும்போது வெறும் கையோடு செல்வதா என்றெண்ணி, அவருக்கு எதையாவது பரிசளிக்கலாம் என்று நினைத்து வால்மார்ட்டிலும், டார்கெட்டிலும் இரண்டு மணிநேரம் கரங்கி முடிவெடுக்கமுடியாமல் குழம்பி, கடைசியில் மனைவிக்கு போனைப் போட்டேன். அச்சமயம் அவர் ஒரு ட்ரீட்மென்டுக்காக குழந்தையுடன் பெங்களூரில் தாய் வீட்டில் இருந்தார். நடுச்சாமத்தில் என் அழைப்பைக் கண்டு பதறி, என் மனைவி என் குழப்பத்தைக்கேட்டு சிரிப்பதா அழுவதா என்கிற நிலையில், ஜெயமோகன் அவர்கள் நிறைய பயணிப்பதால் அதற்கு உபயோகமாக இருக்கும்படி எதையாவது வாங்கினால் நன்றாக இருக்கும் என்று கூற, ஒரு சிறிய travel accessories bag வாங்கிக்கொண்டேன்.

அடுத்த நாள் ஜெமோ சந்திப்பு. இரவே அவருக்கு வாங்கிய அன்பளிப்பை gift wrap செய்து விட்டு அதையும், விஷ்ணுபுரம் புத்தகத்தையும் பேக்கில் வைத்து விட்டு ஒரு விதமான anxietyயோடே தூங்கப் போனேன்.

10 மணிக்கு ஜெமோ சந்திப்பு. 9:45க்கே லைப்ரரிக்கு சென்று விட்டேன். சுமார் 10 பேர் அதற்கு முன்னரே வந்து அங்கு காத்துக் கொண்டிருந்தனர். ஓரிருவர் கையில் பூங்கொத்து வைத்து இருந்தனர். சிலர் கைகளில் புத்தகங்கள். 

பெரும்பாலனவர்கள் கேஷுவலான உடையில் வந்து இருந்தது சற்று ஏமாற்றமே! ஒரு பெரும் ஆளுமையை சந்திக்கச் செல்லும்போது சிறப்பாக உடை அணிந்து செல்வது அவருக்கு நாம் அளிக்கும் மரியாதை. நம்மவர்களுக்கு அது ஏனோ புரிவதேயில்லை. ஒருமுறை ஜேசுதாஸ் அவர்கள் மலையாளிகள் அசோசியேஷன் நிகழ்ச்சிக்காக டாலஸ் வந்திருந்தபோது அவரைக் காண வந்திருந்த மலையாளிகள் அனைவரும் டிப் டாப்பாக ஃபார்மலாக உடை அணிந்து வந்திருந்ததை நினைத்துக் கொண்டேன். அது தாசேட்டனுக்கு அவர்கள் அளிக்கும் மரியாதையின் வெளிப்பாடு. 

யாருடனும் பரிச்சயமில்லாததாலும், இயல்பான கூச்ச சுபாவத்தினாலும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் ஒரு பரபரப்பு. ஜெமோ வந்துவிட்டாரென. காத்திருந்த நாங்கள் அனைவரும் நூலகம் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டோம். ஓரிரு நிமிடங்களில் ஜெமோவும் அருண்மொழி மேடமும் அவர்கள் உள்வட்ட நண்பர்கள் புடைசூழ உள்ளே வந்தனர். மிக இயல்பாக, மெல்லிய புன்னகையுடன், approachable personality ஆக ஜெமோ வந்தார். ஏனோ ஜெமோவின் முகம் மறைந்துபோன, என் பிரியமான பெரியப்பாவை நொடிநேரம் ஞாபகப்படுத்தியது. 

நான் படித்து வியந்த ஒரு ஆளுமை, வாழ்வின் பல விஷயங்களை அறிய வைத்த, ரசனயை கூர் படுத்திய, குரு ஸ்தானத்தில் மனதில் வைத்திருக்கும் ஒருவரை அன்று அத்தனை பக்கத்தில் பார்க்கிறோம் என்ற படபடப்பு அடங்கவே சில நிமிடங்கள் ஆனது. 

ஒரு வாசகி கடவுள் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவர் கர்ப்பிணியாக இருந்ததாக நினைவு. 

கேள்வி பதில் ஃபார்மெட்டில் அமைந்த நிகழ்வென்பதால், கேள்விகளைக் கேட்கலாம் என்று கூற, முதல் வரிசையில் அமர்ந்து இருந்த ஒரு பெண்மணி, ‘நீங்கள் சமஸ்கிருதத்தை செத்த பாஷை என’ என ஆரம்பிக்க, ஜெமோ உடனே குறுக்கிட்டு, நான் எங்கே எப்போது அப்படி சொன்னேன் என்று அந்த பெண்ணிடம் கேட்க, அவர் ஏதோ சொல்ல திக்கித் தடுமாற, ஜெமோ தனக்கே உரிய பாணியில் எப்படி சமஸ்கிருதம் தொடர்பு மொழியாக இருந்ததே தவிர அது எப்போதுமே common man’s language ஆக இருந்ததில்லை என்பதையும் அதற்கான காரணத்தையும் பொறுமையாக விளக்கினார். இந்த மனிதர் நாற்பதாண்டுகளுக்கு மேலாக, தமிழ்ச்சூழலில் இதைப் போல் எத்தனை தத்தித்தனமான கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார். விரக்தி அடையாமல் இன்னும் கூட இதைப் போன்ற கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்கிறார் என்றால் இந்த மனிதர்கள் மேல் அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. அதற்குப் பிறகு வழக்கமான வாசகர் கேள்விகள். அவரை நெடுநாள் வாசிக்கும் நண்பர்களுக்குத் தெரியும் கொஞ்சம் தேடினால் அவர் தளத்திலேயே நமக்கான பதில்கள் எங்கோ ஒளிந்திருக்கும் என்று. கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் தமிழை வளர்ப்பது எப்படி என்ற ரீதியில் ஏதோ கேட்க, எனக்கு நிஜமாகவே யார் இவர்கள், எங்கிருந்து வருகிறார்கள், யாரிடம் கேட்கிறோம், என்ன கேட்கிறோம் என்ற எந்த லஜ்ஜையும் இல்லாமல் எப்படி இவர்களால் ஒரு அரங்கில் ஒரு பெரும் ஆளுமையிடம் இம்மாதிரி கேள்வி கேட்க தோன்றுகிறது என இருந்தது. அதன் பின்னே பெருவாரியான நேரத்தை St.Louisல் இருந்து வந்திருந்த ஒரு அன்பரும் RJ என அறிமுகப்படுத்திக் கொண்ட இன்னொரு அன்பருமே எடுத்துக் கொண்டனர். ஜெவின் பேச்சைக் கேட்க வந்தோமா, இவர்கள் இருவரின் பேச்சைக் கேட்க வந்தோமா என லேசாக சலிப்படைய ஆரம்பிக்கும் போது ராலே ராஜன் நேரமாகிக்கொண்டிருக்கிறது என்று வந்து காப்பாற்றினார்.

கேள்வி பதில் முடிந்து ஜெவிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் அறிவிக்க, வழக்கம் போல், நம்மவர்கள் ஜெவை மொய்த்துக்கொள்ள, விஷ்ணுபுரம் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு, வரிசை மாதிரி ஒன்றில் நானும் சேர்ந்து கொண்டேன். எதேச்சையாக புத்தகத்தை புரட்டிப்பார்த்த எனக்கு பேரதிர்ச்சி! என் மூன்று வயதுப் பையன் அதில் தன் கைங்கர்யத்தை காட்டியிருந்தான். ‘அய்யோ மகனே, பொக்கிஷம் போல வைத்திருந்த புத்தகத்தில் எப்போதடா இந்த கிறுக்கல் காரியத்தைப் பண்ணினாய்’ என மகனை நினைத்துக்கொண்டு, இதை எப்படி ஜெமோவிடம் காண்பித்து ஆட்டோகிராப் வாங்குவது, ஒருவேளை புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து இது கண்ணில் பட்டால் தப்பாக நினைத்துக்கொள்ள மாட்டாரா என்றெண்ணி, நைசாக அந்த வரிசையில் இருந்து நழுவி பக்கத்தில் அருண்மொழி மேடமை சுற்றியிருந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டேன். பார்ப்பதற்கு ஊரில் பக்கத்து வீட்டு அக்காக்களைப் போலிருந்ததால் குருவைப் பார்க்கும் போது இருக்கும் பயம் கலந்த மரியாதைப் போலன்றி அவரிடம் இயல்பாக பேச முடிந்தது. அவரிடம் நான் கொண்டுபோயிருந்த கிஃப்டைக் கொடுக்க, அவரோ ‘அய்யே, அவர்தாங்க ரைட்டர், அவர்கிட்ட கொடுங்க’ எனச்சொல்ல ‘பரவாயில்லை மேடம், சாரைச் சுற்றி கூட்டம் அதிகமாக இருக்கிறது’ என்று சொல்லி அவரிடமே கொடுத்துவிட்டு, வந்த மட்டுக்கு ஜெமோவோடு ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்வோம் என்று வரிசையில் நின்று ஜெமோவோடு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து ஜெமோவை மதிய உணவுக்கு ஒரு மெக்ஸிகன் உணவகத்துக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும், விருப்பமுள்ள வாசகர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவித்தனர். Chipotle விட்டால், வேறு மெக்ஸிகன் உணவு நமக்கு ஒத்து வராது என்பதாலும், அலுவலகம் போகவேண்டியிருந்ததாலும் அங்கிருந்து நான் விடை பெற்றுக்கொண்டேன்.

இந்த வருடம் ஜெமோ மீண்டும் டாலஸ் வர இருக்கிறார். இம்முறை என் பையனை அழைத்துக்கொண்டு போகவேண்டும், அவரிடம் அவனை ஆசிர்வதிக்க கேட்டுக்கொள்ள வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன். ஆறு வயதான அவனுக்கு ஜெமோவின் பேச்சு புரியாமல் போகலாம், ஆனால் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் ஆளுமையைப் பார்த்து அவனுக்கு ஒரு  inspiration கிடைக்கலாம்.

விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு, ஜெமோ முன்னெடுத்துச் செல்லும் இலக்கிய பயணத்தில் உங்களில் பெரும்பாலோர் அவருக்கு மிக அணுக்கமானவர்கள், அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் முன் வரிசையில் அவருடன் பயணிப்பவர்கள். நான் எங்கோ கடைக்கோடியில், தாமதாமாக அந்த பாதையை கண்டறிந்து பின்னால் வருபவன். எனவே பின்வருபவை என் தனிப்பட்ட அவதானிப்புகளே தவிர, அறிவுரை அல்ல. உங்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு வாசிப்பனுபவமோ, தகுதியோ எனக்கு இருப்பதாகவும் நான் நம்பவில்லை. 1) அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரை மேடைக்கு அழைத்துவருவதற்கு முன்பு அவரைப் பற்றி ஒரு presentation அல்லது சுருக்கமாக ஒரு documentary ஒட விடலாம். வருபவர்கள் அத்தனை பேருக்கும் ஜெமோவை தெரிந்து இருக்கும், அல்லது அவரை வாசித்திருப்பார்கள் என்று நம் தமிழ்ச்சூழலில் எதிர்பார்ப்பது நியாயமாகுமா? சில பேர் தமிழ் மீதான ஆர்வத்தில் வந்திருக்கலாம், சிலர் அவரை சினிமா மூலமாக அறிந்து ஏதோ ஆர்வத்தில் வந்திருக்கலாம். 2) அவர் கலந்துகொள்ளும் கலந்துரையாடல், கேள்வி பதில் மாதிரியான நிகழ்ச்சிகளை விஷ்ணுபுரம் நண்பர்கள் யாராவது moderate செய்தால் தத்தித்தனமான கேள்விகளையும், ஓரிருவர் மொத்த நிகழ்ச்சியயையும் hijack செய்வதையும் தவிர்க்க அது உதவும். 3) சினிமா நட்சத்திரங்களை சுற்றி வளையம் அமைத்து வரும் bouncers போலயோ, தொண்டர் படை சூழ வரும் நம்மூர் அரசியல்வாதிகளைப் போல் அவரைச் சூழ்ந்து வருவதை தவிர்க்கலாம். 4) பெரும்பாலன நிகழ்ச்சிகள் நூலக அரங்குகளிலேயே நடை பெறுவதால், ஜெமோவின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை அந்நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கலாம். தமிழில் படிக்கத் தெரியாத நம் இளைய தலைமுறைக்கும், பிற மொழி, இனத்தவர்களுக்கும் அவர் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களை கொண்டுச் செல்ல எளிதாக இருக்கும்.

இலக்கியச் சந்திப்பு

இலக்கியச் சந்திப்புகளில் பங்குபெறும் அளவிற்கு நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என்ற சந்தேகத்துடனேதான் ஞாயிறன்று ஃப்ரிஸ்கோ நூலகத்தில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கியவட்ட வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ள புறப்பட்டேன்.

சிறுவயதிலிருந்து வாசிக்கும் பழக்கம் இருந்தும், முறையான பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாததும், கடந்த சில வருடங்களாக ஜெயமோகன் வலைத்தளத்தை தவிர தமிழில் வாசிப்பது மிகவும் குறைந்து விட்டதும் எனக்கு தயக்கத்தை உருவாக்கியது. நண்பர் செந்தில் அழைத்தபோது, “ஒருமுறை சென்று பார்த்துவிடலாமே” என்ற எண்ணத்துடன் அவரிடம் வருகிறேன் என சொன்னேன். அவர் என்னை வாட்ஸ்அப் குழுவில் சேர்த்ததும், பிரதீப் அவர்கள் அழைத்து கதைகளுக்கான சுட்டிகளை பகிர்ந்ததும் எனக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியது.


வாசிக்க வேண்டிய நான்கு கதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்:

  • அசோகமித்திரனின் ‘காந்தி’ மற்றும் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’
  • அ. முத்துலிங்கத்தின் ‘கடவுச்சொல்’ மற்றும் ‘ஒரு சாதம்’

சந்திப்பிற்கு நான்கு நாட்களே இருந்ததால், தினமும் இரவில் ஒரு கதை என்று முடிவெடுத்தேன்.
என் மனதிற்கு நெருக்கமானவர் முத்துலிங்கம் என்பதாலும், அவருடைய பல கதைகளை ஏற்கனவே வாசித்திருந்ததாலும் கடவுச்சொல் கதையிலிருந்து தொடங்கினேன்.

பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் வாசிப்பதைப் பார்த்து என் மனைவிக்கும் மகனுக்கும் ஆச்சரியம்!
அ.முத்துலிங்கத்தின் இரண்டு கதைகளும் எளிதாக வந்தது. வாசித்த பின் அவருக்கு ஒரு கடிதம் எழுதும் பழைய பழக்கத்தையும் மீட்டெடுத்தேன்.

அசோகமித்திரனின் கதைகளை வாசிக்கும் போதே “புரிகிற மாதிரி, புரியாத மாதிரி” என்ற மனநிலை. “சந்திப்பில் கேட்டு விளக்கமெடுத்துக்கொள்வோம்” என்று விட்டுவிட்டேன்.


ஞாயிறு காலை 9 மணிக்கு நிகழ்ச்சி. 8:55-க்கு ஃப்ரிஸ்கோ நூலகத்தை வந்தடைந்தேன். ஏற்கனவே வாசகர் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். நூலகம் திறந்ததும் நாங்கள் எட்டு பேர் ஒரு குழுவாக உள்ளே சென்றோம். வெங்கட் பின்னர் இணைந்து கொண்டார்.
அன்னபூரணா அவர்கள் விநாயகரை பாடி நிகழ்ச்சியை தொடங்கினார்கள்.


கதைகள் மற்றும் கலந்துரையாடல்கள்

‘காந்தி’ பற்றி முதலில் விவாதம் நடைபெற்றது. பாலாஜி அவர்கள், அசோகமித்திரனின் எழுத்து “writer’s writer” எனக் குறிப்பிட்டு, பல அடுக்குகள் கொண்ட எழுத்துமுறையை விளக்கினார். மூர்த்தி மற்றும் பிரதீப், காந்தியின் பல பரிணாமங்களைப் பற்றியும், அவர் இன்றும் பேசப்படும் ஒருவராக இருக்கின்ற நிலைப்பாட்டையும் விவாதித்தனர். செந்தில், கசப்பும் கனிவும் கதையின் உள் நயமாக இருப்பதை வெளிப்படுத்தினார். நான் தவறாக புரிந்திருந்த ஒரு வரியை, மூர்த்தி தெளிவாக்கினார். பாலாஜி, ஜெமோவின் ‘இன்றைய காந்தி’ கட்டுரையை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ எனக்கு சற்று பிடிபடாமல் இருந்த கதை. ஆனால் செந்தில், ஐந்து குழந்தைகளை ஐம்புலன்கள், அல்லது பஞ்சபூதங்களாகலாம் என ஒரு புதிய பார்வையை வழங்கினார். மூர்த்தி, நடுத்தர வர்க்க மனநிலையை கதையின் வழியே விவரித்தார். பிரதீப், கதையின் ஒரு காட்சியை தேவதையின் தேடல் என ஓவியப்படுத்தினார்.

‘ஒரு சாதம்’ கதையை, ராதா அவர்கள் நினைவில் இருந்து ழுமையாகச் சொன்னது பிரமிப்பாக இருந்தது.ஒரு சதம் என்பது சிவலிங்கம் கடுமையான உழைப்பு, நேர்மை, புத்திக்கூர்மையால் முன்னுக்கு வரும் ஒரு சதம் பேரில் ஒருவன் என்ற perspective நான் முற்றிலும் எதிர்பாராதது. 

கடைசியாக, ‘கடவுச்சொல்’ . ஏன் கடவுச்சொல் என்ற தலைப்பு என்பதில் ஆரம்பித்து, எப்படி அது ஆப்ரஹாமின் பாவமன்னிப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று சென்றது. வெங்கட் இந்தக் கதை உணர்வுப்பூர்வமாக தன் பாட்டியை நினைவூட்டியதை பகிர்ந்து கொண்டார்.


என்ன கற்றுக்கொண்டேன்?

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்காவிட்டால், இத்தனை புதிய perspectives தெரிந்துக்கொள்ளாமலேயே போயிருப்பேன்! உண்மையில் இவர்கள் பேச்சைக் கேட்கும்போது எனக்குள்ளே ஆச்சர்யமும், பிரமிப்புமே மேலிட்டது. அபாரமான ஞாபக சக்தியும், செறிவான மற்றும் தொடர்ச்சியான வாசிப்பனுபவமும் கொண்ட நண்பர்கள் சூழ இரண்டு மணிநேரம் செலவிட்டது ஒரு புதிய அனுபவம்.

இவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட இன்னொரு விஷயம் அவர்கள் ஒரு சிறுகதையை கிட்டதட்ட மாடர்ன் ஆர்ட் போல பார்க்கும் விதம். மாடர்ன் ஆர்ட்டில் எப்படி ஒவ்வொரு தூரிகை தீற்றலுக்கும், வண்ணங்களுக்கும் உள் அர்த்தம் இருக்ககூடுமோ அதைப் போல கதைக்குள்ளும் இருக்கும், இருக்க வேண்டும் என்று ஆழ்ந்து பார்க்கின்றனர். அறிமுகமோ பயிற்சியோ இன்றி மாடர்ன் ஆர்ட்டை ரசிக்க முடியாது அதைப்போல அவர்கள் அனைவருக்கும் வாசிப்பில் பயிற்சி இருந்ததாகவே எனக்குப்பட்டது. என் வாசிப்பு முறை ரவிவர்மா ஓவியத்தை ரசிப்பது போல. சகுந்தலா, துஷ்யந்தன் வருகிறானா என்று திரும்பி பார்க்கிறாள் என்ற அளவில் ரவிவர்மா ஓவியத்தை பார்க்க, ரசிக்க, அனுபவிக்கத் தெரியும். ஆனால், இந்த நண்பர்கள் ஒரு படி மேலே போய் காளிதாசனின் சாகுந்தலத்தில் இருந்து மேற்கோள் காட்டும் அளவுக்கு ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் கொண்டவர்கள் என்று தோன்றியது.


நன்றிகள்

  • செந்திலுக்கு, இந்த வாசகர் வட்டத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும்
  • பிரதீப்பிற்கு, கதைகள் அனுப்பி, கலந்துரையாடலுக்கு வழிவகுத்ததற்கும்
  • மற்றும்
  • இவை அனைத்துக்கும் மையப்புள்ளியாக இருக்கும் ஜெயமோகன் அவர்களுக்கு.